அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
அப்போது, மிகப்பெரிய கோயிலில் ராம் லல்லாவை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரக்சா பந்தன் விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அயோத்திக்கு மிக அருகேதான் சுல்தான்பூர் உள்ளது. அடுத்த ஆண்டு அயோத்திக்கு வந்து ராம் லல்லாவை தரிசனம் செய்ய அப்பகுதி மக்களையும் நான் அழைக்கிறேன்.
ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நல்ல வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அது 2023ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் நிறைவு பெற்று, மக்களின் தரிசனத்துக்குத் தயாராகிவிடும் என்றார்.
கோயிலின் கட்டுமானத்துக்கு இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்றும் கோயிலின் கட்டுமானம் பார்ப்பவர்களை வியக்கவைக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறினார்.