குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒடிசா அரசு புதிதாக திருமணமானவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு தொகுப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: “ இந்த தொகுப்பில் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், குடும்ப கட்டுப்பாடு முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்த சிறிய புத்தகம் மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ் ஆகியவை இடம் பெற்றிருக்கும். தேசிய உடல்நலம் சார்ந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தொகுப்பு புதிதாக திருமணமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் புதிதாக திருமணமானவர்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வுடன் செயல்படலாம். இந்தத் திட்டம் தற்போது மாவட்டங்கள் தோறும் அமல்படுத்தப்பட உள்ளது. சமூக ஆர்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி, அவர்கள் புதிதாக திருமணமாகவுள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு இந்த குடும்ப கட்டுப்பாடு தொகுப்பினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.” எனக் கூறியுள்ளனர்.
நாட்டிலேயே முதல் முறையாக ஒடிசா இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.