ஜெய்ஸ்-இ-மொஹம்மது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த மொஹம்மது நதீம் எனற் பயங்கரவாதியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கிறார்கள்.
பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புடன் 2018ஆம் ஆண்டிலிருந்து இவர் தொடர்பு வைத்திருந்ததும், உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இவர் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் பிரசாந்த் குமார் கூறுகையில், கைது செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாதி, உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறினார்.
நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர் ஐஇடி வெடிகுண்டுகள் தயாரிக்கவும், கொரில்லா தாக்குதல் போல கத்தியால் தாக்குதல் நடத்தும் பயிற்சியையும் பெற்றிருப்பதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.