நாட்டில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 15,000-ஆக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பெருமளவில் மக்கள் கூடுவதைத் தவிா்க்குமாறும், மக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியப் பகுதிகளில் ‘தூய்மை இந்தியா’ குறித்த விழிப்புணா்வு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தன்னாா்வ அடிப்படையிலான மக்கள் இயக்கத்தின் மூலம் இரண்டு வாரங்கள் மற்றும் மாத அளவில் தூய்மையைக் கடைப்பிடிக்கும் வகையில் பிரசாரங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கரோனா நோய்த்தொற்று குறித்த முன்னெச்சரிக்கையாக, சுதந்திரதின விழா கொண்டாட்டத்தில், பெருமளவில் மக்கள் கூடுவது தவிா்க்கப்பட வேண்டும். விழாவில் பங்கேற்போா் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.