அரசினுடைய பணக்கார நண்பர்கள் கோடி கணக்கிலான வரி தள்ளுபடிகளை பெறுகிறார்கள். ஆனால், ஏழை மக்களுக்கோ இலவச உதவிகள் மட்டுமே கிடைக்கின்றன என பிரதமரை குறிவைத்து காங்கிரஸ் தாக்கிப் பேசியுள்ளது.
கடந்த மாதம் உத்தரப் பிரதேசத்தில் பந்தேல்கண்ட் விரைவுச் சாலையை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சிகளால் கொடுக்கப்படும் இலவசங்கள் மிகவும் ஆபத்தானவை எனக் குறிப்பிட்டார். அதனால் மக்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் அந்த மாதிரியான இலவச கலாசாரங்களைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது என தெரிவித்திருந்தார். இது போன்ற இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மாபெரும் தடையாக இருந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இலவசங்கள் வழங்கப்படுவதற்கு உவமையாக இனிப்புகள் பண்டிகைக் காலங்களில் வழங்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். அந்த இனிப்புகள் போன்றதுதான் அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசங்களும். அவை பார்ப்பதற்கு நன்மை அளிப்பது போல தெரிந்தாலும். நாட்டின் முன்னேற்றேத்திற்கு என்றும் அவை தடைக்கற்களே எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: பிரதமர் பதவி மீது ஆசையில்லை; ஆனால்..: நிதீஷ் குமார் அதிரடி பதில்
பிரதமரின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப் தற்போது பேசியுள்ளார்,
அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த 5 ஆண்டுகளில் 5.8 லட்சம் கோடி வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதே போல 1.45 லட்சம் கோடி மதிப்பிலான பெரு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அவர்களது கடினமான காலங்களில் கொடுக்கப்படும் இலவசங்கள் இனிப்பு போன்றது என்றால் பெரு நிறுவனங்களுக்கு இப்படி வரிச் சலுகைகள் அளிப்பதை என்னவென்று சொல்வது. ஏழைகளுக்கு கிடைப்பதைக் காட்டிலும் அரசின் நண்பர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளே அதிகமாக உள்ளது. நாங்கள் பொய் கலாசாரத்திற்கு எதிரானவர்கள். எங்களால் நாட்டின் குடிமக்களை கடினமான தருணங்களில் அப்படியே விட்டுவிட முடியாது.
இதையும் படிக்க: விடைத்தாளுடன் 500 ரூபாய் தாளை இணைத்த மாணவன்: நடந்தது வேறு
பல்வேறு திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயன் தருவதாக அமைந்துள்ளன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மக்கள் கடினமான தருணங்களில் வெகுவாகப் பயனடைந்துள்ளனர். இலவச மதிய உணவு திட்டத்தின் மூலம் நாட்டில் 12 கோடி குழந்தைகள் பயனடைகின்றனர். உணவுப் பாதுகாப்பு சட்டத்தினால் கரோனா பேராபத்துக் காலத்தில் நாட்டில் உள்ள 60 சதவிகித மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் விவசாயிகளின் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கைக்கு எதிராக நிற்கவில்லை.” என்றார்.