காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி நாளை(ஆக.13) விருந்து அளிக்கிறார்.
இந்த வருடம் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் கடந்த திங்களன்று முடிவடைந்தன. கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த்தில் 66 பதக்கங்களை வென்ற இந்திய அணி, பிர்மிங்கம் போட்டியில் 61 பதக்கங்களை வென்றது. இப்போட்டியில் ஐயாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றார்கள்.
இம்முறை இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்தது. கடைசி நாளன்று பாட்மிண்டனில் பி.வி. சிந்து, சாத்விக் - சிராஜ் ஜோடி, லக்ஷயா சென், டேபிள் டென்னிஸில் சரத் கமல் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றார்கள். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் சத்யன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், காமன்வெல்த்தில் மொத்தம் 61 பதக்கங்களைப் பெற்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி பாராட்டியதுடன், அவர்களுக்கு பிரதமர் மாளிகையில் நாளை (ஆக.13) காலை 11 மணிக்கு விருந்து அளிக்கிறார்.