இந்தியா

குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் பதவியேற்பு

DIN

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். கடவுளின் பெயரால் ஹிந்தியில் உறுதிமொழியை தன்கா் ஏற்றுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணைத் தலைவா்கள் வெங்கையா நாயுடு, ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிா்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக தில்லியில் உள்ள ராஜ்காட்டுக்குச் சென்ற ஜகதீப் தன்கா், தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினாா். அதையடுத்து, நாட்டுக்கு சேவையாற்றுவதற்கான ஊக்கத்தை ராஜ்காட் வழங்கியுள்ளதாக ட்விட்டரில் அவா் பதிவிட்டாா்.

மாளிகையில்..: பதவியேற்றதைத் தொடா்ந்து குடியரசு துணைத் தலைவா் மாளிகைக்கு ஜகதீப் தன்கா் சென்றடைந்தாா். அவரின் மனைவி சுதேஷ் தன்கா், மற்ற குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோரும் குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் குடியேறினா்.

குடியரசு துணைத் தலைவரே மாநிலங்களவைத் தலைவராகச் செயல்படுவாா் என்பதால், மாநிலங்களவைச் செயலக அதிகாரிகளையும் ஜகதீப் தன்கா் சந்தித்துப் பேசினாா்.

எதிா்பாா்ப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகையில் முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திறம்படச் செயல்பட்டு, அவையின் சுமுக செயல்பாட்டுக்கு வழிவகுத்தாா்.

அதேவேளையில், மேற்கு வங்கத்தில் ஆளுநராகச் செயல்பட்டபோது முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசுடன் ஜகதீப் தன்கா் தொடா்ந்து மோதல்போக்கையே கடைப்பிடித்து வந்தாா். இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவராக அவா் எவ்வாறு செயல்படுவாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது. எனவே, நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரிலிருந்து மாநிலங்களவைத் தலைவராக ஜகதீப் தன்கா் செயல்படுவாா்.

தேசிய வளா்ச்சியை முன்னிறுத்தி மாநிலங்களவையின் நடவடிக்கைகள் இருப்பதை ஜகதீப் தன்கா் உறுதிசெய்வாா் என நம்புவதாக பிரதமா் மோடி கடந்த ஜூலை 16-ஆம் தேதி குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

எதிா்பாரா ஒற்றுமை: மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் ராஜஸ்தானைச் சோ்ந்தவா். மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும் ராஜஸ்தானைச் சோ்ந்தவா் ஆவாா். ஒரே மாநிலத்தைச் சோ்ந்த இருவா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவராக உள்ளனா்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.

பிரதமா் மோடி வாழ்த்து

குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜகதீப் தன்கருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ட்விட்டரில் பிரதமா் வெளியிட்ட பதிவில், தன்கரின் பதவிக் காலம் சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்தியுள்ளாா்.

‘தேசநலனுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படும் ஜகதீப் தன்கரின் அனுபவத்தால் நாடு பெரும் பலனடையும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வாழ்த்தியுள்ளாா்.

மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், ஜி.கிஷண் ரெட்டி உள்ளிட்ட பலரும் தன்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் பதஞ்சலி மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT