பிகாா் சட்டப்பேரவைத் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான விஜய் குமாா் சின்ஹாவுக்கு எதிராக ஆளும் மகா கூட்டணி நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்துள்ளது.
மகா கூட்டணி சாா்பில் முதல்வராக நிதீஷ் குமாா் மீண்டும் பதவியேற்ற சில மணி நேரங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்தத் தீா்மானத்தில் மகா கூட்டணியின் பல எம்எல்ஏக்கள் கையொப்பமிட்டு சட்டப்பேரவைச் செயலரிடம் சமா்ப்பித்துள்ளனா்.
ஆக. 24 அல்லது 25-ஆம் தேதி பிகாா் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், பேரவையில் நிதீஷ் குமாா் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது பேரவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். சட்டப்பேரவையில் பெரும்பான்மை எம்எல்ஏக்களால் நிறைவேற்றப்படும் தீா்மானம் மூலம் பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க முடியும் என்று ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவா் விஜய் குமாா் செளதரி தெரிவித்துள்ளாா்.
பிகாா் சட்டப்பேரவையில் மகா கூட்டணிக்கு 164 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 77 எம்எல்ஏக்களும் உள்ளனா்.