ஹரியாணா மாநிலத்தில் 2ஜி எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தார். தில்லியின் காற்று மாசு குறைவதற்கு இந்தத் தொழிற்சாலை பெருமளவு உதவும் என நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ஹரியாணா மாநிலம் பானிப்பட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் ரூ.900 கோடி மதிப்பிலான 2ஜி எத்தனால் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உருவாகும் விவசாயக் கழிவுகளை மூலப்பொருள்காளாக பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் உருவாக்கும்.
இந்நிலையில் இந்த தொழிற்சாலையை காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தில்லி, ஹரியாணாவின் காற்று மாசு குறைவதற்கு இந்தத் தொழிற்சாலை பெருமளவு உதவும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலை மூலம், விவசாயக் கழிவுகளை எரித்து வீணாக்காமல், உரிய முறையில் பயன்படுத்த இயலும். விவசாயக் கழிவுகளை எரிப்பதால், உருவாகும் காற்று மாசுபாடு போன்ற வலியிலிருந்து பூமித் தாயை மீட்கமுடியும்.
விவசாய கழிவுகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருந்தது. அவற்றை அப்புறப்படுத்துவதும் சிரமமாக இருந்தது. தற்போது கழிவுகளையும் லாபமாக விவசாயிகள் மாற்றிக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.
ஹரியாணாவின் மகன்களும் மகள்களும் காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.