பிகார் ஆளுநர் பகு சௌஹானை இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் நிதிஷ் குமார் சந்திக்கவுள்ளார்.
பிகாரில் அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான சூழ்நிலைகள் நிலவுகின்றன. பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
பாஜகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டால் ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தரப்பிலிருந்து ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, மாலை 4 மணிக்கு நிதிஷ் குமாரை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டு, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஆதரவு கடிதத்தை அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | பிகாரில் என்ன நடக்கிறது? ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்களிடமிருந்து வாங்கப்பட்ட செல்லிடப்பேசிகள்
இதனால் பிகாரில் பாஜகவுடன் கூட்டணி முறிந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சியைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2017ல் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதிஷ் குமார் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.