ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக உடனான கூட்டணி பலவீனமாக்கிவிடும் என கடந்த 2020ஆம் ஆண்டு முதல்வர் நிதீஷ் குமாரை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக் ஜனசக்தியின் பெயரையும், அக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானையும் குறிப்பிடாமல், எம்.எல்.ஏ.க்கள் நிதீஷ்குமாரை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக பிகார் ஆளுநர் பகு சௌஹானை இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் நிதீஷ்குமார் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணி குறித்து முதல்வர் நிதீஷ் குமாரிடம் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜகவுடனான கூட்டணி நம்மை பலவீனமாக்கிவிடும் என நிதீஷ் குமாரிடம் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானின் பெயரைக் குறிப்பிடாமல், நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், கட்சிக்கு அது நல்லதல்ல எனக் கூறியதாகத் தெரிகிறது.
பாஜகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டால் பிகாரில் ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.