மகாராஷ்டிரத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில் பதவியேற்றுக்கொண்ட 18 எம்எல்ஏ.க்களில் 3 அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் சஞ்சய் ரத்தோட், முன்னதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசில் அமைச்சராகப் பணியாற்றினார். இவர் கடந்தாண்டு புணேவில் ஒரு பெண்ணின் மரணத்தில் தொடர்புடையதாகக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர் போலீசார் ரத்தோட்டுக்கு க்ளீன் சிட் வழங்கியதாக முதல்வர் ஷிண்டே கூறியதையடுத்து, அவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர் என்று கூறப்பட்டபோதும் ரத்தோட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மாநில பாஜக துணைத் தலைவர் சித்ரா வாக் கூறியுள்ளார். அவரை அமைச்சரவையின் அமைச்சர் ஆக்கினாலும், அவருக்கு எதிரான எனது போராட்டத்தைத் தொடர்வேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, நாங்கள் போராடி வெற்றி பெறுவோம் என்றார்.
புதிதாகப் பதவியேற்ற மற்றொரு அமைச்சரும், சிவசேனா எம்எல்ஏ.வுமான சத்தார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சத்தார் முன்பு காங்கிரஸில் இருந்தார். 2019ல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சிவசேனாவில் சேர்ந்தார். சர்ச்சையில் சிக்கிய சத்தார் இது ஒரு அரசியல் சதி என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், புதிதாகப் பதவியேற்ற மற்றொரு அமைச்சரும், பாஜக தலைவருமான விஜய்குமார் காவிட் 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் அவர் தலைமையிலான பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 5 ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டார்.
2004-09ல் என்சிபியில் இருந்த காவிட், அப்போதைய காங்கிரஸ் என்சிபி அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர், பாஜகவில் இணைந்து 2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.