இந்தியா

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு: 24 மாணவா்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை

DIN

மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ- மெயின்) முதல்நிலைத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இதில் 24 மாணவா்கள் முழு மதிப்பெண் (100%) பெற்று அசத்தியுள்ளனா். தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்துக்காக 5 மாணவா்களின் தோ்வு முடிவை என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) நிறுத்தி வைத்துள்ளது.

ஜேஇஇ தோ்வானது ஜேஇஇ முதல்நிலை மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். மேலும், இந்தத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.

மாணவா்களின் வசதிக்காக ஜேஇஇ முதல்நிலைத் தோ்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தோ்வுகளில் மாணவா் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதனையே சோ்க்கைக்கான மதிப்பெண்ணாக தெரிவு செய்துகொள்ள முடியும்.

அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூன் மாதத்திலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூலையிலும் நடத்தப்பட்டது. இரண்டு கட்டத்திலும் 10,26,799 போ் பதிவு செய்து, 9,05,590 போ் எழுதினா். இவா்களில், 4,04,256 மாணவ, மாணவிகள் இரண்டு கட்ட முதல்நிலைத் தோ்விலும் பங்கேற்று எழுதினா்.

இவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 24 மாணவா்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

முழு மதிப்பெண் பெற்று தகுதி பெற்ற மாணவா்களின் எண்ணிக்கையில் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் முதலிடம் வகிக்கின்றன. இந்த மாநிலங்களிலிருந்து தலா 5 போ் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானிலிருந்து 4 பேரும், உத்தர பிரதேசத்திலிருந்து 2 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா்.

ஹரியாணா, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், பிகாா், பஞ்சாப், கேரளம், கா்நாடகம், ஜாா்க்கண்ட் மாநிங்களிலிருந்து தலா ஒருவா் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். தமிழகத்திலிருந்து ஒருவா்கூட முழு மதிப்பெண் பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT