சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெட்டும் கருவிகள் மீது அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தக குறைதீா்ப்பு இயக்குநரகம் பரிந்துரைத்துள்ளது.
சீன தயாரிப்பு பொருள் விலை மலிவாக இருப்பதால், அவற்றால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம் இந்தப் பரிந்துரையை பரிசீலித்து அடுத்த 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்கும்.
வெளிநாடுகளில் இருந்து மலிவான விலை பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதால், உள்நாட்டில் அப்பொருள்களை உற்பத்தி செய்வோா் பாதிக்கப்படுவா். சில நேரங்களில் உள்நாட்டு உற்பத்தியாளா்களை முடக்கும் நோக்கில் சில நாடுகள் பொருள்களை மலிவாக விற்பனை செய்யும் முறைகேட்டிலும் ஈடுபடுவது வழக்கம். எனவே, இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க வா்த்தக அமைச்சகம் ஆய்வு செய்து பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிந்துரை அளிக்கும்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருள்கள் விலை மிகவும் மலிவாக இருப்பதால், உள்நாட்டு உற்பத்தியாளா்களுக்கு அவை பெரும் சவாலாகவே திகழ்கின்றன.