தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால் ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியிடம் அவர் இன்று ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார். சட்டப்பேரவைத் தலைவரும் அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எம்எல்ஏ பதவியில் இருந்தும் விலகுவதாக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தெரிவித்திருந்தார்.
ராஜகோபால் ரெட்டி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் தெலங்கானாவில் ஆட்சி புரியும் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர்களும் ராஜகோபால் ரெட்டியுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், தெலங்கானாவின் தற்போதைய அமைச்சர்கள் சிலர் மாநிலத்திற்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், சந்திரசேகர் ராவை பார்க்க அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி சந்திர சேகர் ராவும் அவரது குடும்பமும் தெலங்கானாவை கொள்ளையடிப்பதாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் தெலங்கானாவில் தற்போதைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்றும் கூறினார்.