கேரளத்தில் மழை குறைந்தாலும், விதி வளைவை மீறி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து பல அணைகளில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இடுக்கி நீர்த்தேக்கத்தின் செருதோணி அணையின் நீர்மட்டம் 2,385 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து 150 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு இடுக்கி மாவட்டட நிர்வாகம் தடை விதித்துள்ளது,
இடுக்கியில் உள்ள இடைமலையாறு அணையின் நீர்மட்டம் 163.04 மீட்டராகவும், இதன் முழு நீர்மட்டம் 169.00 மீட்டராகவும் உள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் மாநிலத்தின் மற்றொரு பெரிய அணையான முல்லைப் பெரியாறு அணையில், நீர்மட்டம் 139 அடியாக உள்ளது.
வயநாட்டில் உள்ள பாணாசுர சாகர் அணையின் ஒரு ஷட்டர், உபரி நீரை வெளியேற்றுவதற்காக திங்கள்கிழமை காலை அணை திறக்கப்பட்டதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன் தெரிவித்தார்.
பாணாசுர சாகர் அணையின் ஷட்டரை அதிகாரிகள் 10 சென்டிமீட்டர் திறந்து விட்டதால், வினாடிக்கு 8.5 கனஅடி நீர் கபனி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 5 செ.மீ உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டங்களாக 35 கனஅடி நீர் வெளியேற்றப்படும். தேவைப்பட்டால், மீதமுள்ள ஷட்டர்கள் உயர்த்தப்படும்' என்றார்.
ஜூலை 31 முதல் மாநிலத்தில் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து பேரைக் காணவில்லை, மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
337 நிவாரண முகாம்களில் மொத்தம் 14,611 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 46 வீடுகள் முழுமையாகவும் 19 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.