கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காவது நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி நகரில் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய பழைய குடியிருப்பில் இருந்து தொடங்கிய பேரணிக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.கே. நவாப் தலைமை வகித்தார். புறநகர் பேருந்து நிலையத்தை அடுத்து உள்ள அண்ணா சிலை அருகே இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது.
அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் டி. செங்குட்டுவன், மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், நகரமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டிணம், பர்கூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.