தில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, பவன் குமாா் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
இதையும் படிக்க | என்ன, பால் பாக்கெட் எடை குறைந்திருந்ததா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
இந்நிலையில், தில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.