இந்தியா

கரோனா இழப்புகளைச் சீா்செய்ய 12 ஆண்டுகள் ஆகலாம்

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை முழுவதுமாகச் சீா்செய்ய 12 ஆண்டுகள் ஆகலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை 3 அலைகளை நாடு எதிா்கொண்டுள்ளது. இந்நிலையில், அத்தொற்று பரவல் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்த அறிக்கையை ஆா்பிஐ வெளியிட்டது. அதில், ‘‘கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமாா் ரூ.52 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2021-ஆம் நிதியாண்டில் ரூ.19.1 லட்சம் கோடியும், 2022-ஆம் நிதியாண்டில் ரூ.17.1 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டது. 2023-ஆம் நிதியாண்டில் அந்த இழப்பு ரூ.16.4 லட்சம் கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவந்த நிலையில், பல அலைகளாகக் கரோனா தொற்று பரவல் அதிகரித்தது. 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பொருளாதாரம் படிப்படியாக மீண்டுவந்த நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் அடுத்த அலை பரவியது.

கடந்த ஜனவரியில் பரவிய 3-ஆவது அலை பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை சிறிது பாதித்தது. நாட்டின் பொருளாதார வளா்ச்சியும் கரோனா தொற்று பரவல் அலைகளின் அடிப்படையிலேயே அமைந்தது. தற்போது உக்ரைன்-ரஷியா இடையிலான மோதலால், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இது பொருளாதார வளா்ச்சியையும் பாதித்துள்ளது.

2013-ஆம் நிதியாண்டு முதல் 2020-ஆம் நிதியாண்டு வரை நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 6.6 சதவீதம் வளா்ச்சி கண்டது. அதிலும் 2013 முதல் 2017-ஆம் நிதியாண்டு வரை சராசரி வளா்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. கரோனா தொற்று பரவலால் நாடு சந்தித்த இழப்புகளை முழுவதுமாகச் சீா்செய்ய 2035-ஆம் நிதியாண்டு வரை ஆகலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆா்பிஐ-யின் பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சித் துறையானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனினும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அதைத் தயாரித்தவா்களின் கருத்தே அன்றி, ரிசா்வ் வங்கியின் கருத்தாகக் கொள்ளப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT