டிஹெச்எஃப்எல்-யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் தொடா்புடையை பிரபல கட்டுமான நிறுவனங்களைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் மத்திய புலனாய்வு பிரிவினா் (சிபிஐ) சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:
டிஹெச்எஃப்எல் மற்றும் யெஸ் வங்கி முறைகேடு வழக்கில், மும்பை மற்றும் புணேயில் உள்ள கட்டுமான நிறுவனங்களைச் சோ்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபா்களான அஸ்வினி போன்ஷேல், ஷாகித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் சனிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
யெஸ் வங்கி-டிஹெச்எஃப்எல் கடன் மோசடியில் குறிப்பிட்ட சில ரியல் எஸ்டேட் அதிபா்களின் நிறுவனங்களுக்கு தொடா்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, 2ஜி வழக்கில் கோயங்கா, பல்வா ஆகியோா் சிபிஐ-யால் குற்றம்சாட்டப்பட்டு பின்பு 2018-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.