உடுப்பி/மங்களூரு: அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு 40 சதவீதம் தரகு கேட்பதாக கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது குற்றம் சுமத்திய ஒப்பந்ததாரர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த விவகாரத்தில், அமைச்சர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக ஊடகத்தினருக்கு ஒப்பந்ததாரர் அனுப்பிய கடிதத்தில் தனது உயிரிழப்புக்கு அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாதான் காரணம் எனக் கூறியிருந்ததால், அதன் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்தனர்.
பெலகாவியைச் சேர்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது கடந்த மார்ச் 30-ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தன் நண்பர்களுடன் உடுப்பிக்குச் சென்றிருந்த சந்தோஷ் பாட்டீல், தங்கும் விடுதியில் ஏப்.12-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இறப்பதற்கு முன் தனது ஊடக நண்பர்களுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், தனது மரணத்துக்கு அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாதான் காரணம் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, அமைச்சர் பதவியை ஈஸ்வரப்பா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஈஸ்வரப்பாவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை புதன்கிழமை சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர், சந்தோஷ் பாட்டீல் தனது தற்கொலைக்கு ஈஸ்வரப்பாவை குற்றம்சாட்டியிருப்பதால், அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.
இந்த நிலையில், சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரசாந்த் பாட்டீல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது முதல் தகவல் அறிக்கையை போலீஸôர் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: சந்தோஷ் பாட்டீல் உயிரிழப்பு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஈஸ்வரப்பாவிடம் நேரடியாகப் பேசி, தகவலைத் திரட்டவிருக்கிறேன். இந்த வழக்கில் ஈஸ்வரப்பாவை குற்றவாளியாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரியவரும்.
இந்த வழக்கில் எவ்வித தலையீடும் இருக்காது. சட்டத்தின்படி விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் பாஜக தேசியத் தலைவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றார்.
ராஜிநாமா செய்ய மாட்டேன்
ஒப்பந்ததாரர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
இது குறித்து சிவமொக்காவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சந்தோஷ் பாட்டீலின் மரணத்தில் சதி உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். சந்தோஷ் பாட்டீல் தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ள வாட்ஸ்ஆப் தகவலை மரணக் குறிப்பாக எடுத்துக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது.
அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. எனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிய மாட்டேன். இந்த வழக்குக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை அளிப்பேன் என்றார்.