புது தில்லி: மிகச் சரியாக 201 நாள்களுக்குப் பின் நாட்டில் 20,000க்கும் குறைவாக புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,795 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 26,030 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18,795 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,97,581-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த 179 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,47,373 ஆக உயர்ந்துள்ளது.
26,030 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,29,58,002 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,92,206-ஆக உள்ளது.
நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கேரளம் உருவெடுத்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,699 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 87,07,08,636 கோடியாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் திங்கள்கிழமை மட்டும் 1,02,22,525 தடுப்பூசிகளை சுகாதாரத்துறை பணியாளர்கள் செலுத்தியுள்ளனர்.