ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உரி பகுதி எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக்கொன்றனா். அவா்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஹத்லங்கா பகுதிக்கு அருகே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வியாழக்கிழமை காலை சந்தேகத்துரிய வகையில் சிலரின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களின் ஊடுருவல் முயற்சியை தடுக்கும் வகாயில் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், 7 கைத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றாா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ஸ்ரீநகா் ராணுவத் தலைமையகத்தில் பேட்டியளித்த ராணுவ துணைத் தளபதி டி.பி.பாண்டே, ‘எல்லைப் பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஊடுருவல் முயற்சிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், அண்மைக் காலமாக மீண்டும் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்குத் தெரியாமல் இது நடைபெற வாய்ப்பில்லை. உரி பகுதியில் கடந்த 19-ஆம் தேதியும் இதேபோன்ற ஒரு ஊடுருவல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது’ என்று கூறினாா்.