மாற்றுத் திறனாளிகள் மற்றும் தடுப்பூசி மையங்களுக்கு வர இயலாதவர்களுக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
"தினசரி பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து வந்தாலும், நாடு இன்னும் இரண்டாம் அலையில்தான் உள்ளது. கடந்த வார மொத்த பாதிப்பில் 62.73 சதவிகித பாதிப்புகள் கேரளத்தில் மட்டும் பதிவாகியுள்ளன. கேரளத்தில் மட்டும்தான் நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் உள்ளது.
வாராந்திர தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 33 மாவட்டங்களில் 10 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. 23 மாவட்டங்களில் 5-10 சதவிகிதத்துக்கு இடையே பதிவாகியுள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கும் மாவட்டங்களில் மக்கள் பெருமளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 66 சதவிகிதத்தினருக்குக் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 23 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மேலும் துரிதப்படுத்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் தடுப்பூசி மையங்களுக்கு வர இயலாதவர்களுக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும்" என்று தெரிவித்தனர்.