புது தில்லி: ராமரின் வாழ்வியலோடு தொடர்புடைய இடங்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வரவும், கோயில்களை தரிசிக்கவும் கூடுதலாக 4 ராமாயண யாத்திரை சிறப்பு ரயில்களை இயக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இயங்கி வரும் ராமாயண யாத்திரை சிறப்பு ரயில்களுடன், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள் நவம்பர் 7ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.
ஐஆர்சிடிசி வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இந்த நான்கு ரயில்களும் மதுரை, புணே, ஸ்ரீகங்காநகர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலிருந்து நவம்பர் முதல் ஜனவரி வரை இயக்கப்பட உள்ளன.
முதல் ரயில் நவம்பர் 16ஆம் தேதியும், 2வது மற்றும் மூன்றாவது ரயில்கள் முறையே நவம்பர் 25ஆம் தேதி, நவம்பர் 27ஆம் தேதியிலும், நான்காவது ரயில் ஜனவரி 20ஆம் தேதியிலும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.