பிரதமர் நரேந்திர மோடி 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக நாளை(செப்.22) அமெரிக்கா செல்லவிருக்கிறார்.
நாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, செப்டம்பர் 23 ஆம் தேதி தொழிலதிபர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் ஹூக்-யையும் அவர் தனியே சந்தித்துப் பேசுகிறார்.
இதன்பின்னர் அன்றைய தினமே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசுகிறார்.
இறுதியாக செப்டம்பர் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். இரு தலைவர்களின் இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இந்த சந்திப்பில் ஆப்கன் விவகாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது.
இதையடுத்து, ஜப்பான், ஆஸ்திரேலயா, பிரிட்டன் நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, நான்கு நாடுகள் பங்கேற்கும் 'குவாட்' கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
பின்னர் 25 ஆம் தேதி நியூயார்க்கில் ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் இந்தியா திரும்புகிறார். இந்தபயணத்திற்காக பிரதமர் மோடி நாளை சிறப்பு விமானத்தில் அமெரிக்கா செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.