யூடியூப் சேனலில் வகுப்புகள் எடுப்பதன் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வருவாய் கிடைப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
தில்லி -மும்பை இடையிலான அதிவிரைவு சாலைப் பணிகளை கடந்த சில நாள்களாக நிதின் கட்கரி ஆய்வு செய்து வருகிறாா். குஜராத் மாநிலம் பஹ்ரூச்சில் வெள்ளிக்கிழமை சாலைப் பணிகளை ஆய்வு செய்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
கரோனா பொதுமுடக்கத்தின்போது நான் இரு பணிகளை அதிகம் செய்தேன். சமையல் கலைஞராக உருவெடுத்து வீட்டில் சமையல் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டேன். இதுதவிர 950-க்கும் மேற்பட்ட ஆன்லைன் வகுப்புகளை எடுத்து, அதனை யூ டியூபில் வெளியிட்டேன். இதில் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவா்களுக்கான பாடங்களும் அடங்கும். எனது யூடியூப் சேனலில் உள்ள அந்த விடியோக்களை பாா்ப்பவா்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.4 லட்சம் எனக்கு வருவாய் கிடைக்கிறது.
இந்தியாவில் நல்ல பணிகளைச் செய்பவா்களுக்கு பல நேரங்களில் போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றாா் கட்கரி.
கட்கரி தனது கருத்துகளை வெளிப்படையாகக் கூறும் குணமுடையவா் என்பது குறிப்பிடத்தக்கது.