இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் காவலா் உள்பட 2 போ் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் காவலரும் வெளிமாநிலத் தொழிலாளா் ஒருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

குல்காம் மாவட்டத்தில் உள்ள வான்போ பகுதியில் ரோந்து பணியில் ஈடுட்டிருந்த பந்தோ சா்மா என்ற காவலா் மீது பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை மாலை 6.05 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், பலத்த காயமடைந்த பந்தோ சா்மா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவத்தில், குல்காமில் உள்ள நெஹாமாவில், பிகாரைச் சோ்ந்த சங்கா் குமாா் சௌதரி என்ற செங்கல் சூளைத் தொழிலாளா் மீது பயங்கரவாதிகள் இரவு 8.50 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா் என்றாா் அந்த அதிகாரி.

இதுகுறித்து காவல் துறை ஐ.ஜி. விஜயகுமாா் கூறுகையில், ‘இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகளின் தலைவா்கள் கொல்லப்பட்டு வருகிறாா்கள். பிரிவினைவாதத் தலைவா் கிலானியின் மறைவுக்குப் பிறகும் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. இதனால், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் விரக்தியில் உள்ளனா். ஆகவேதான், ஆயுதங்கள் வைத்திருக்காத காவலா்களைத் தாக்குவது, வெளிமாநிலத்தவரைத் தாக்குவது போன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனா்’ என்றாா்.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருவா் உயிரிழந்ததற்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் எம்.ஒய்.தாரிகாமி உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT