திருவனந்தபுரம்: கரோனா பாதித்த அரசு ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள ஏதுவாக 7 நாள்கள் கரோனா சிறப்பு சாதாரண விடுப்புக்கு கேரள அரசு அனுமதியளித்துள்ளது.
அதன்படி, கரோனா உறுதி செய்யப்பட்ட அல்லது கரோனா பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அரசு ஊழியர்கள், அதற்குரிய சான்றிதழை சமர்ப்பித்து, 7 நாள்கள் சிறப்பு சாதாரண விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று மாநில முதன்மைச் செயலாளர் வி.பி. ஜோய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்களுக்குப் பிறகு கரோனா இல்லை என்று சான்றிதழ் எடுத்துக் கொண்டு அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் கரோனா வந்த அரசு ஊழியர்கள், தங்களை தனிப்படுத்திக் கொள்ள அவசியமில்லை. ஒருவேளை அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ உதவியை நாடலாம். ஒரு வேளை நோய் தீவிரம் அதிகரித்தால், அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் நாள்களுக்கு இந்த சிறப்பு சாதாரண விடுப்புக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் அதுவும் மருத்துவ சான்றுகளை அடிப்படையாக வைத்தே வழங்கப்படும்.
அதே வேளையில், இந்த சிறப்பு சாதாரண விடுப்பை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சாதாரண விடுப்பு அனைத்து அரசு, அரசு உதவி பெறும், பொதுத் துறை, மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பொருந்தும்.