ஹைதராபாத்: வீட்டிலிருந்து புறப்பட்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கி, ஒரு வழியாக அலுவலகத்தை அடைந்து தனது பணியை தொடங்க வேண்டிய அந்த மறந்து போன நாள்களை மீண்டும் நனவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்.
எப்படி இருந்தாலும், வீட்டிலிருந்து பணியாற்றும் முறையிலிருந்து வெளியேறி, ஒரு வழியாக அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டிய நிலைக்கு தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள 1520 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் 6 லட்சம் ஊழியர்களில் சுமார் 40 சதவீதம் பேர், வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பிவிட்டனர். ஆனால், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் பணியாற்றும் பகுதிகளுக்கே திரும்பி வருகிறார்கள். கரோனா மெல்ல குறைந்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், அலுவலகங்களும், தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவோ அல்லது விரைவில் வர தயாராக இருக்குமாறோ அறிவுறுத்தி வருகின்றன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியிலிருக்கும் எச்சிஎல் டெக், விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும், தங்களது ஊழியர்களிடம், வீட்டிலிருந்து பணியாற்றும் முறைக்கு விரைவில் விடைகொடுக்குமாறு தெரிவித்துள்ளன.