உத்தரப் பிரதேசம் மீரட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் 130 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாக நுடெமா மருத்துவமனை மருத்துவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, விஸ்வாஸ் சைனிக்கு கரோனா இருப்பது உறுதியானது.
இதுகுறித்து மருத்துவர் அவ்னீத் ராணா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அவருக்கு கரோனா இருப்பது ஏப்ரல் 28ஆம் தேதி உறுதியானது. தொடக்கத்தில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருடைய ஆக்ஸிஜன் நிலை 16ஆக இருந்ததால், செயற்கை சுவாச கருவி வழியே அவருக்கு ஒரு மாதம் வரை சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சைனிக்கு மன உறுதி இருந்தது. எனவேதான், அவரால் நோயுக்கு எதிராக 130 நாள்கள் போராட முடிந்தது" என்றார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சைனி, "நீண்ட நாள்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மருத்துவமனையில் என்னுடன் இருந்த நோயாளிகள் கரோனா காரணமாக உயிரிழக்கும்போது பயமாக இருந்தது. மருத்துவர் எனக்கு ஊக்கமளித்து கரோனாவிலிருந்து மீள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டே இருந்தார்" என்றார்.