பாஜக எம்எல்ஏ பூபேந்திர படேல் (59) அடுத்த குஜராத் முதல்வராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு செய்யப்பட்டுள்ளார். யாரும் எதிர்பாராத நிலையில், குஜராத் முதல்வர் பொறுப்பிலிருந்து விஜய் ரூபானி நேற்று விலகினார்.
குஜராத்தின் புதிய முதல்வர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்:
- உத்தரப் பிரதேச ஆளுநரும் குஜராத் முன்னாள் முதல்வருமான ஆனந்திபென் படேலுக்கு நம்பிக்கைக்குரியவராக கருதப்படும் பூபேந்திர படேல், கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் படேலை விட 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார்.
- அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவராகவும் அம்தவாட் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராகவும் பூபேந்திர படேல் பதவி வகித்துள்ளார்.
- அகமதாபாத் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், கட்டட பொறியியலில் பட்டய படிப்பு முடித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு, தனக்கு 5 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தேர்தல் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
- அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், படேல் சமூகத்தை சேர்ந்த பூபேந்திர படேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சமூகத்தை திருப்தி அடையும் நோக்கில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- மத்திய அமைச்சர்களான மன்சுக் மாண்ட்வியா, பர்ஷோத்தம் ரூபாலா, லட்சத்தீவு நிர்வாக அலுவலரான பிரஃபுல் கோடா படேல், குஜராத் மாநில வேளாண்துறை அமைச்சர் ஆர்.சி. ஃபால்டு ஆகியோரிலிருந்து ஒருவர் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டுவந்தது. இந்நிலையில், பூபேந்திர படேலை முதல்வராக தேர்வு செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதையும் படிக்க | குஜராத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? மூத்த பாஜக தலைவர்கள் சந்திப்பு