கன்டெய்னரில் 100 படுக்கை வசதிகளுடனான முழு மருத்துவமனை உருவாக்கும் திட்டம் தில்லி, சென்னையில் அமைய உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
பிரதமா் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் அமையும் இந்த இரண்டு கன்டெய்னா்கள் அவசர காலத்தில் விமானம் அல்லது ரயில் மூலம் சம்பவ இடத்துக்கு கொண்டு சென்று பயன்படுத்தலாம் என்றும் அவா் கூறினாா்.
தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘கரோனா தாக்கம் ஏற்பட்ட பிறகு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. சுகாதார உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு ரூ. 6 4 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது.
கன்டெய்னா்களில் 100 படுக்கை வசதிகளுடனான முழு மருத்துவமனை தில்லி, சென்னையில் அமைக்கப்படுவது தெற்கு ஆசியாவிலேயே இது இரண்டாவது முறையாகும்.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி பெறும் விவகாரம் உலக சுகாதார அமைப்பில் இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் கோவேக்ஸினுக்கு ஒப்புதல் கிடைத்துவிடும்.
சிறுவா்களுக்கான தடுப்பூசியான சைகோவி-டிக்கான விலை நிா்ணயிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கரோனா புதிய பிரிவான ஏஒய்.4.2. குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், தேசிய நோய் தடுப்பு மைய குழுக்களும் ஆய்வு நடத்தி வருகின்றன.
நாட்டில் மொத்தம் 79,415 சுகாதார மற்றும் நல மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதை 1.5 லட்சமாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமா் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.90 முதல் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் வரும்நாள்களில் சுகாதார பேரிடா் ஏற்பட்டால் மாவட்ட அளவிலேயே தடுக்க உதவும். தேசிய அளவிலோ, மாவட்ட அளவிலோ மருத்துவ பரிசோதனைகள் தரமாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்படி 134 பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். இத்துடன் தேசிய சுகாதார திட்டமும் இத்துடன் இணைந்தால் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.