வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண்காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் லக்கமிப்பூர் கெரியில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு நீதி கிடைத்திட வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி கருத்து தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து பாஜகவின் தேசிய செயற் குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதையும் படிக்க | இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் 'கூழாங்கல்' : மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இதனால் அதிருப்தியடைந்த அவர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை பரேலி தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “நான் ஊழல் எதுவும் செய்யவில்லை. ஆனால் பணம் பறிக்கும் பல தலைவர்கள் இருக்கிறார்கள். நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தையும், அரசு தரும் வீட்டையும் எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் என்னை உயர்த்துவதற்காக எனக்கு அதிகாரத்தைத் வழங்கவில்லை. அவர்களை உயர்த்துவதற்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என வருண்காந்தி பேசியுள்ளார்.
இதையும் படிக்க | போன்பேவின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
வருண்காந்தியின் இந்தக் கருத்து சொந்தக் கட்சிக்குள் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக சொந்தக் கட்சி உறுப்பினரே கருத்து தெரிவித்துள்ளது அரசியல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் விடியோவைப் பகிர்ந்து , “பெரிய மனம் கொண்ட தலைவரின் அறிவார்ந்த வார்த்தைகள்" என பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.