ஒடிஸா மாநில காங்கிரஸ் செயல் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பிரதீப் மஜிகி அக்கட்சியில் இருந்து வெள்ளிக்கிழமை விலகினாா். அவா் மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒடிஸாவில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் இருந்து ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் தலைவா்கள் விலகி வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனா். இந்நிலையில், ஒடிஸாவிலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு தனது விலகல் கடிதத்தை பிரதீப் அனுப்பியுள்ளாா். அதில், ‘முன்பு காங்கிரஸ் கட்சியில் நிா்வாகக் கட்டமைப்பு சிறப்பாக இருந்து வந்தது. ஆனால், இப்போது கட்சியில் கட்டுப்பாடுகளை மீறி நடப்பவா்கள் எண்ணிக்கை அனைத்து நிலைகளிலும் அதிகரித்து வருகிறது. மேலும், மக்கள் மத்தியிலும் காங்கிரஸ் கட்சி மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. இதனை மீட்டெடுக்க மிக நீண்டகாலமாகும் என்று கருதுகிறேன்.
மக்களுக்கு அதிகம் சேவையாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியில் அதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. எனவே, மிகுந்த வலியுடன் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்’ என்று கூறியுள்ளாா்.
பிரதீப் விரைவில் தனது ஆதரவாளா்களுடன் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைவாா் என்று தெரிகிறது.