தடுப்பூசி குறித்து பேசிய பிரதமர் மோடி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி பேசவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். மக்கள்தொகையில் 21 சதவிகிதத்தினர் மட்டுமே கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
100 கோடி தடுப்பூசி என்பது சாதனைதான். ஆனால், உலகில் 125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்கள்தொகையை ஒப்பிடுகையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
பிரதமர் மோடி இந்த ஆண்டின் இறுதிக்குள், நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
மக்களுக்கு பல பிரச்னைகள் உள்ளன. அதுகுறித்து பிரதமர் இன்று ஏன் பேசவில்லை? பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் வேலையின்மை, பசி அதிகரிப்பு, உணவு தானியங்கள் வீணாக்குதல் என பல பிரச்னைகள் இருக்கின்றன. இதைப்பற்றி பிரதமர் மோடி ஏன் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.