உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டிகள் வழங்கப்படும் என கட்சியின் பொதுச்செயலரும், மேலிடப் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி ஹிந்தியில் பதிவிட்டுள்ளது:
"நான் சில மாணவிகளைச் சந்தித்தேன். படிப்பதற்கும், பாதுகாப்புக்கும் ஸ்மார்ட்ஃபோன் தேவை என அவர்கள் என்னிடம் கூறினர். தேர்தல் அறிக்கைக் குழு அனுமதியுடன் 12-ம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு ஸ்மார்ட்ஃபோன்களும், பட்டதாரி பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டிகளும் வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது."
இதையும் படிக்க | ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
இந்த வாரத்தில் பிரியங்கா காந்தி அளிக்கும் இரண்டாவது தேர்தல் வாக்குறுதி இது. ஏற்கெனவே 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவிகித இடங்கள் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை பிரியங்கா காந்தி அறிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது.