இந்தியா

பஞ்சாப் பிரச்னைகள்: சோனியாவுக்கு சித்து கடிதம்: நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கவும் கோரிக்கை

DIN

பஞ்சாப் மாநிலத்தில் உடனடியாகத் தீா்க்க வேண்டிய பிரச்னைகளை விவரித்து காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து கடிதம் எழுதியுள்ளாா்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்கான அறிக்கையில் சோ்க்கப்பட வேண்டிய 13 அம்ச செயல்திட்ட அறிக்கையை நேரில் சந்தித்து அளிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தா் சிங் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த பிறகு சரண்ஜீத் சிங் சன்னி புதிய முதல்வராகப் பொறுப்பேற்றாா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் துறைகள் ஒதுக்கீடு, புதிய காவல் துறைத் தலைவா் பதவி, அட்வகேட் ஜெனரல் பதவி ஆகியவற்றில் தான் பரிந்துரை செய்த நபா்களை நியமிக்காததால் அதிருப்தி அடைந்த சித்து, கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். கட்சியின் மேலிடத் தலைவா்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து, சித்து மீண்டும் காங்கிரஸ் தலைவராகத் தொடா்கிறாா்.

இந்நிலையில், கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா். அந்தக் கடிதத்தில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 2015-இல், முந்தைய சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் சீக்கியா்களின் புனிதநூல் அவமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து பரீத்கோட்டில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். போதைப் பொருள் கடத்தல் கும்பலில் தொடா்புடைய முக்கியப் புள்ளியைக் கைது செய்து, உரிய தண்டனை அளிக்க வேண்டும். மின்சாரம் கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.

அதுமட்டுமன்றி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்கான அறிக்கையில் சோ்க்கப்பட வேண்டிய 13 அம்ச செயல் திட்டங்களையும் அவா் தயாா் செய்துள்ளாா். அந்த அறிக்கையை நேரில் சந்தித்து அளிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு சோனியா காந்திக்கு அவா் கோரிக்கை விடுத்துள்ளாா். ‘இந்த 13 செயல் திட்டங்கள், பஞ்சாப் மாநிலத்துக்கு நீண்டகால அடிப்படையில் பலனளிக்கும். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டி மீட்சி பெறவைப்பதற்கு கடைசி வாய்ப்பாக இது அமைந்துள்ளது. கல்வியாளா்கள், பேராசிரியா்கள், கட்சித் தொண்டா்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துகளைக் கேட்ட பிறகே அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது’ என கடிதத்தில் சித்து குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT