கேரளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 21 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல்வேறு இடங்களில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
சாலைகளிலும் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 21 பேர் பலியானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.