கட்சித் தலைவரைத் தேர்வு செய்வதற்கானத் தேர்தல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் என காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்தது.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியது:
"காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 21, 2022 மற்றும் செப்டம்பர் 20, 2022 இடையே நடைபெறும். கட்சியின் அனைத்து நிலை தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு கட்சியின் சித்தாங்கள், கொள்கைகள், கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பு, தேர்தல் மேலாண்மை, தற்போதைய அரசின் தோல்விகள், பரப்புரைகளுக்குப் பதிலடி தருவது உள்ளிட்டவை பற்றி பயிற்சி நடத்தப்படும்."
முன்னதாக, ராகுல் காந்தியே மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும், அதுகுறித்து பரிசீலிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதன்பிறகு, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.