இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், பிகாா் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ஒரு ‘போக்ஸோ’ நீதிமன்றம், 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஒரே நாள் விசாரணையில் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
அதன் மூலம், நாட்டிலுள்ள போக்ஸோ நீதிமன்றங்களில் அதிவேகமாக தீா்ப்பு வழங்கப்பட்ட வழக்காக இது கருதப்படுகிறது.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி நடைபெற்ற இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக, அடுத்த நாளே முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது. அராரியா மகளிா் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ரீதா குமாா் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கில் விரைந்து தீா்ப்பளித்த சிறப்பு நீதிபதி சசிகாந்த் ராய், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ. 50,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்காக ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவு கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டபோதும், உத்தரவு பிரதி வெள்ளிக்கிழமைதான் வெளியிடப்பட்டது.
இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்குரைஞா் சியாம்லால் யாதவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாட்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதிவேகமாக தீா்ப்பு வழங்கப்பட்ட வழக்கு இதுதான். கடந்த 2018-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் மத்திய பிரதேசத்தின் தாடியா மாவட்ட நீதிமன்றம் 3 நாள்களில் தீா்ப்பளித்த சாதனையை, இந்த வழக்கு முறியடித்துவிட்டது’ என்றாா்.