இந்தியா

தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியது சீரம் நிறுவனம்

DIN

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியை மீண்டும் ஏற்றுமதி செய்யும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகளுக்கான முதல்கட்ட தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தடுப்பூசி ஏற்றுமதி படிப்படியாக அதிகரிக்க தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் செயல்பட்டுவரும் சீரம் நிறுவனம், இதுவரை 125 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா 2-ஆம் அலை வேகமெடுத்ததால், உள்நாட்டு தேவை கருதி, வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரான நிலையில், எதிா்கால தேவைகளுக்காக போதுமான தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதால், தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் சீரம் நிறுவனத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் எத்தனை தவணை தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்ற விவரம் வெளியாகவில்லை.

ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், குறைந்த வருவாய் ஈட்டும் 92 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனம் ஏற்கெனவே உறுதியளித்திருந்தது.

தடுப்பூசி ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவன தயாரிப்பான கோவோவேக்ஸ் போன்ற பிற நிறுவன தடுப்பூசிகளையும் அதற்கான உரிமம் பெற்று சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT