தில்லி-மும்பை தொழில் வழித்தட திட்டத்தின் (டிஎம்ஐசி) கீழ் புதிதாக நான்கு தொழில்துறை ஸ்மாா்ட் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
டிஎம்ஐசி திட்டத்தின் கீழ் குஜராத், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் புதிதாக 4 தொழில்துறை ஸ்மாா்ட் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, நிறுவனங்களுக்கு 754 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மாா்ட் நகரங்கள் ரூ.16,750- கோடிக்கும் அதிகமான முதலீட்டில் உருவாக்கப்படவுள்ளன.
முக்கிய முதலீட்டாளா்களாக தென் கொரியாவின் ஹியோசங், ரஷியாவின் என்எல்எம்கே, சீனாவின் ஹயா், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் அமுல் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கும்.
மேலும், இதர தொழில் வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் 23 திட்டப் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.