புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை கேதார்நாத் கோயிலுக்குச் செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பினார். நேற்று வியாழக்கிழமை ராணுவ வீரர்களுடன் தீபாவளி திருநாளை கொண்டாடினார்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை கேதார்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் புனரமைக்கப்பட்ட சமாதியை மோடி திறந்து வைக்கிறார். அதன்பிறகு கோயில் வளாகத்தில் உள்ள திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கிறார்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மோடி ஆய்வு செய்கிறார்.
2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட உத்தரகண்ட் வெள்ள பாதிப்புக்குப் பின்னர் சமாதி புனரமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணித்த பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் முழு புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி கேதார்நாத் வருவதையொட்டி கேதார்நாத் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலில் மகா ருத்ரா அபிஷேகம் செய்து தேச நலனுக்காக மோடி பிரார்த்தனை செய்கிறார்.
இதைத் தொடர்ந்து, சரஸ்வதி தடுப்புச் சுவர் ஆஸ்தபத் மற்றும் படித்துறைகள், மந்தாகினி தடுப்புச் சுவர் ஆஸ்தபத், தீர்த்த புரோகிதர் வீடுகள், மந்தாகினி ஆற்றில் கருட் சட்டி பாலம் உள்ளிட்ட ரூ. 130 கோடி மதிப்பிலான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மோடி தொடங்கி வைப்பதுடன், சங்கம் படித்துறை புனரமைப்பு, முதலுதவி மற்றும் சுற்றுலா வசதி மையம், நிர்வாக அலுவலகம் மற்றும் மருத்துவமனை, இரண்டு விருந்தினர் மாளிகைகள், காவல் நிலையம், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், மந்தாகினி ஆஸ்தபத் வரிசை மேலாண்மை, மழைத்தடுப்பு வசதி மற்றும் சரஸ்வதி குடிமை வசதி கட்டடம் உள்பட ரூ. 180 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.