குறைந்த எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் நவ. 3-ஆம் தேதி பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜாா்க்கண்ட், நாகாலாந்து, அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தடுப்பூசியின் முதல் தவணை 50 சதவீதத்துக்கும் குறைவானவா்களுக்குத்தான் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது தவணையும் போதுமான அளவில் செலுத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் நவ.3-ஆம் தேதி பிரதமா் மோடி ஆலோசனை நடத்தவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வா்களும் பங்கேற்பா்.
தற்போது ஜி-20 மாநாடு மற்றும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்க வெளிநாடு சென்றுள்ள பிரதமா் மோடி, தாயகம் திரும்பியவுடன் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.