சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தில் நக்ஸல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒரு தலைமைக் காவலர் பலியானார். மற்றொரு காவலர் படுகாயமடைந்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது: ராய்ப்பூரில் இருந்து 450 கி.மீட்டர் தொலைவில் குத்ரு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வனப் பகுதியில் அம்பேல்லி கிராமத்தில் சாலை பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது நக்ஸல்கள் வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் தலைமைக் காவலர் கலேந்திர பிரசாத் நாயக் என்பவர் பலியானார். மற்றொரு காவலர் கமல் தாக்குர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். காயமடைந்த கமல் தாக்குர் பிஜப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிரிழந்தவரின் சடலமும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.