உத்தரகண்டில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் முதல்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், உத்தரகண்டில் 15 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளார்.
‘மியூகோமைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
இந்த பூஞ்சை பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே தாக்கியுள்ளது. உத்தரகண்டில் அதிகபட்சமாக ஹரித்வார் பகுதியில் 5 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 15 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது உத்தரகண்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனாவால் பதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.