நாட்டில் வரும் ஜூலை மாத இறுதிக்குள் 51.6 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.
ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘கரோனா தடுப்பூசிகளுக்கான தேவையை பூா்த்தி செய்யும் விதமாக அவற்றின் தயாரிப்பு சீராக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சமமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வேகமாக அனுப்பிவைக்கும் பணிகள் தொடா்கின்றன.
நாட்டில் இதுவரை 18 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது ஜூலை இறுதிக்குள் 51.6 கோடி தடுப்பூசிகளாக அதிகரிக்கும்.
தற்போது ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பரிசோதனையில் உள்ள ஸைடஸ் கடிலா நிறுவனத்தின் தடுப்பூசி, சீரம் நிறுவனத்தின் நோவாவாக்ஸ் தடுப்பூசி, பாரத் பயோடெக்கின் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து மற்றும் ஜெனோவா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படும் நிலையில், ஆகஸ்ட்-டிசம்பா் காலத்தில் இந்தியாவிடம் 216 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும்’ என்று தெரிவித்தாா்.