அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அலுவலகங்கள், மத இடங்கள் மற்றும் வாராந்திர சந்தைகளை மூடுமாறு அசாம் அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகளும், புதிய வழிகாட்டுதல்களையும் தலைமைச் செயலாளர் ஜிஷ்ணு பாருவா வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நகர்ப்புறங்களில் உள்ள தனித்தனி கடைகள், வணிக நிறுவனங்கள், அனைத்து நாள்களிலும் பிற்பகல் 1 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பஜார்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அடுத்த 15 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள், சட்ட அமலாக்கச் சேவைகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது. திருமணம், இறுதிச்சடங்கு ஆகிய சடங்குகளில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.