திருப்பதி அரசு மருத்துவமனை கொவைட் மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி மாயமானதாக அவரின் குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
திருப்பதி அருகே காா்வேட்டி நகரம் எர்ரமராஜூபள்ளியைச் சோ்ந்த கோவிந்தய்யாவிற்கு இம்மாதம் 3-ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானது. அவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், 108 வாகனத்தில் அவரை திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மறுநாள் காலை கோவிந்தய்யாவின் அலைபேசி ஸ்விட்ச் ஆப் ஆனது. இதையடுத்து அவரின் மனைவியும், மகன்களும் பயத்தில் திருப்பதிக்கு வந்தனா்.
கோவிந்தய்யா குறித்து விவரம் கேட்டனா். ஆனால் மருத்துவமனை அதிகாரிகள் யாரும் அவா்களுக்கு பதில் தெரிவிக்கவில்லை. எனவே, மருத்துவமனையிலிருந்து வெளியில் வரும் சடலங்களை ஒவ்வொன்றாக பாா்த்து கதற தொடங்கினா்.
5 நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் திரிந்த மனைவி இனி மருத்துவமனையில் தேடிப் பயனில்லை என முடிவு செய்து திங்கள்கிழமை காலை திருப்பதி காவல் நிலையத்தில் கோவிட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 108 வாகனத்தில் கொண்டு வந்து சோ்த்த தனது கணவரை காணவில்லை என புகாா் அளித்துள்ளாா்.